🔸 சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் சாட்சியங்கள் சம்பந்தமான சத்தியக்கடதாசிகள் 3 ஆம் திகதி சமர்ப்பிப்பு
🔸 சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் சாட்சியங்கள் சம்பந்தமான சத்தியக்கடதாசிகள் தொடர்பான பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாடு 9 ஆம் திகதி முன்வைக்கப்படும்
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில், கலந்துரையாடப்பட்டதை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்பு ஆகிய இரண்டு தரப்பினராலும் உடன்பாடுகள் சிலவற்றுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக்குழு நேற்று (28) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த உடன்பாடுகள் சிலவற்றுக்கு இணக்கம் ஏற்பட்டது.
இங்கு சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசரணைக்குழுவில் பங்குபற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர், பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பான, இரண்டு தரப்பினராலும் இணங்கக்கூடிய உடன்பாடுகள் சிலவற்றை முன்வைத்தனர். இது தொடர்பில் பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரம தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி முரண்படும் விடயங்களை சுட்டிக்காட்டினார். அதற்கமைய, முரண்படாத விடயங்கள் தொடர்பில் இரண்டு தரப்பினரதும் அடிப்படை இணக்கம் வழங்கப்பட்டது.
அதனையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட சாட்சியங்கள் சம்பந்தமான சத்தியக்கடதாசிகளை எதிர்வரும் 3 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு குழுவில் சமர்ப்பிப்பதற்கு இரண்டு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட சாட்சியங்கள் சம்பந்தமான சத்தியக்கடதாசிகள் தொடர்பான பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டை 9 ஆம் திகதி முன்வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் வாய்மொழி மூலமான சாட்சியங்கள் மற்றும் குறுக்கு விசாரணை செய்தல் என்பவற்றுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி முதல் தினந்தோறும் மு.ப. 9.30 மணி முதல் விசாரணைக்குழு கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.