கல்வி அமைச்சு என்ற வகையில், நாம் முன்மொழியும் கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படை தூண்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், கல்வி அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படைத் தூண்களைக் கொண்ட திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கல்வி அமைச்சின் வரவு செலவுத் தலைப்பு தொடர்பான விவாத்த்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மார்ச் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்காக எமது அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதுவரை கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகப்படுத்தியுள்ளோம். அடுத்த 8 மாதங்களுக்கு மட்டும் 619 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூலதனச் செலவினங்களுக்காக மட்டும் 21 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதுவே அண்மைக்கால வரலாற்றில் கல்வி மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகையாகும். இதை செலவிடுவதற்கான தெளிவான திட்டத்தை முன்வைத்துள்ளோம். இந்த கல்வித் துறையை சரியான முறையில் செய்யாமல், நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தை அடைய முடியாது. கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றம் மூலம் தான் நாம் எதிர்பார்க்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை அடைய முடியும்.
எனவே, இத்தொகையை செலவிடும் திட்டம் குறித்து பேசும் போது, கல்வித்துறையை மாற்றுவது குறித்து ஆழமாக சிந்தித்து, அதற்கு தேவையான நடவடிக்கைகளை கண்டறிந்து, இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமரப்பித்துள்ளோம். கல்வி அமைச்சு என்ற வகையில், நாங்கள் முன்வைக்கும் கல்வி சீர்திருத்தத்திற்கு ஐந்து அடிப்படை அம்சங்களுடன் தலையிடுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். முதலாவது பாடத்திட்டத்தை இற்றைப்படுத்தல். இதன் நோக்கம் பாடத்திட்டத்தை இற்றைப்படுத்துவது மட்டுமல்ல. அது சமூகத்தை மாற்றுவதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் புதிய பாடத்திட்டத்தை முன்வைக்க நாங்கள் முன்மொழிகிறோம். அதற்காக அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்களை முன்னெடுப்பதற்கு 160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்தம் பற்றி முன்பும் பேசப்பட்டுள்ளது, கல்வி சீர்திருத்தம் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக இது முறையாக செயல்படுத்தப்படவில்லை.
இந்த சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால், பாடத்திட்டத்தை மட்டும் மாற்றினால் போதாது. இன்னும் பல பகுதிகள் உள்ளன. அதனால்தான் கல்விச் சீர்திருத்தத்தில் ஐந்து அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் ஒன்று பாடத்திட்டம், அதனால் தான் வரவுசெலவுத்திட்டத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான மனித வளத்தைத் தயார்படுத்துதல். ஆசிரியர்கள் மட்டுமன்றி, ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வியாளர்கள், கல்வி நிர்வாக சேவையில் உள்ளவர்கள், இவர்கள் அனைவரினதும் திறன் விருத்தியில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அது தான் எங்கள் இரண்டாவது அடிப்படை. அந்த நோக்கத்திற்காக, வரலாற்றில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் திறன் விருத்திக்காக மிகப் பெரிய தொகையை ஒதுக்கியுள்ளோம். இதற்காக 1640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படவில்லை. எங்களுக்கு இதைச் செய்ய முடிந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரியர்களை உருவாக்க, ஆசிரிய கலாசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், குறிப்பாக தற்போது ஆசிரிய சேவையில் உள்ள மனித வளங்கள் அல்லது தொடர்புடைய சேவைகளில் கவனம் செலுத்தியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில் எமது தேசிய கல்வியியல் கல்லூரிகள் மிகவும் சோகமான நிலையில் உள்ளன.
பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விக் கல்லூரிகளுக்கு ஒரு கண்காணிப்பு வி ஜயத்தை மேற்கொண்டேன். எப்போதேனும் ஆசிரியராகப் போகும் அந்த மாணவர்களுக்கு வசதிகள் இல்லை. தங்குமிட வசதிகள் இல்லை, தண்ணீர் இல்லை, நாம் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் பற்றி பேசுகிறோம். ஆனால், அந்தப் பாடசாலைகளில் பாடம் நடத்தப் போகும் ஆசிரியர்கள் கரும்பலகையில் இருந்துதான் பாடம் படிக்க வேண்டும். சரியாக மின்சாரம் இல்லை, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை, அதனால் தான் இந்த ஆண்டு விசேட கவனம் செலுத்துகிறோம். மேலும் பல ஆண்டுகளாக பாடசாலைகளில் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 2016 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சியின் மூலம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் உள்ளது.
ஆனால் இன்றும் கூட முறையாக கட்டி முடிக்கப்படாத ஆபத்தான கட்டிடங்கள் உள்ளன. நல்ல பெயர்ப் பலகைகள், கதவுகள் மற்றும் சுவர்கள் உள்ளன, ஆனால் அவற்றில் இருந்து உள்ளே நுழைந்த பின்னர், பிள்ளைகளுக்கான நல்ல வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் இல்லை. தண்ணீர் இல்லை இன்றும் குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாத பாடசாலைகள் உள்ளன. எனவே இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி 11,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து பாடசாலைகளில் அரைகுறையாக நிற்கும் வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய எண்ணியுள்ளோம். குறிப்பாக சுகாதார வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் எமது நாட்டு பிள்ளைகள் சுகாதார வசதிகள் இல்லாத பாடசாலைக்கு செல்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம். பெருந்தோட்ட சமூகத்திலுள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
எனவேதான் இந்த நிரல் அமைச்சின் ஊடாக 11,126 மில்லியனும் மாகாண சபைகள் ஊடாக 14,896 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும், அதுவே நமது மூன்றாவது அடிப்படை. நான்காவது தூண் அல்லது அடிப்படை என்னவென்றால், பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படவும் வேண்டும் மற்றும் கற்றல் செயல்முறை மதிப்பீடு செய்யப்படவும் வேண்டும். பரீட்சை திணைக்களத்திற்கு மதிப்பீடுகளுக்கான விசேட பொறுப்பு உள்ளது, பரீட்சை திணைக்களம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத பல தேவைகளைக் கொண்டுள்ளது நான் பாராளுமன்றத்திற்கு வந்த முதல் வருடம் பரீட்சை திணைக்களத்திற்கு செலவிடப்பட்ட மூலதனம் பற்றி கேட்டது ஞாபகம் இருக்கிறது. மிகக் குறைவு. இந்த வருடம் பரீட்சை திணைக்களத்திற்கு 12,360 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம்.
மதிப்பீட்டு செயல்முறையை வலுப்படுத்தவும், கொள்ளளவை அதிகரிக்கவும் பரீட்சை திணைக்களத்திற்கு இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. நமது கல்வி முறையின் மிகப்பெரிய பிரச்சினை, பரீட்சை மைய முறையில் பிள்ளை பெறும் உளவியல் அழுத்தமாகும். அதை மாற்ற வேண்டுமானால், அந்த மதிப்பீட்டின் முக்கியப் பொறுப்பைக் கொண்ட நிறுவனத்தை வலுப்படுத்த வேண்டும். எமது ஐந்தாவது தூண் கல்வி என்பது, நாம் பார்ப்பது போல், அது அமைச்சு, பிள்ளைகள், ஆசிரியர்கள் அல்லது பாடசாலைகளுக்கு மட்டும் பொறுப்பாக உள்ள ஒன்று அல்ல. இதைச் செய்ய, ஒரு சமூக உரையாடல் தேவை. இது போன்ற சமயங்களில்தான் எனக்கு கலாநிதி ஜானகி ஜயவர்த்தன நினைவுக்கு வருகிறார். இந்த சமூக உரையாடலை உருவாக்க சமூக ஆர்வலர்கள் தேவை. அந்த சமூக உரையாடலை உருவாக்குவது எங்கள் திட்டத்தில் உள்ளது. மேலும் பிள்ளைகளின் நலன்பேணலுக்காகவும் நிதி ஒதுக்கியுள்ளோம். உயர்கல்வியைப் பற்றியும் நான் குறிப்பாகச் சொல்ல விரும்புகிறேன்.
உயர்கல்வியிலும் தரத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். பல்கலைக் கழகங்களைக் கட்டுவது மட்டுமல்ல, பல்கலைக் கழகம் கட்டுவது என்பது பெயர்ப் பலகையை அமைப்பது மட்டுல்ல. பல்கலைக்கழகங்கள், பீடங்கள் மற்றும் கற்கைகள் மிகவும் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவும், மிகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தொடங்கப்பட்ட பல உதாரணங்கள் எங்களிடம் உள்ளன. அவற்றின் தரம் குறித்து எந்த கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி அந்த மாணவர்களுக்கு ஏற்படும் நலன்கள், மாணவர்களின் கல்விக்கு என்ன நடக்கும் என்பதிலும் கவனம் செலுத்தப்படவில்லை. அதனால்தான் உயர்கல்வித் திட்டத்தின் தரத்தை உயர்த்துவதில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அதுபோலத்தான் மாணவர் நலனும். இளைஞர்களின் என்ன நிலையில் உள்ளார்கள், அவர்களுக்கு கல்வி குறித்தோ, அவர்களின் எதிர்காலம் குறித்தோ நம்பிக்கை இல்லை. மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர் சமுதாயத்திற்கு தேவையான வசதிகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. நான் நேற்று அம்பாறையில் இருந்தேன், ஹார்டி நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன்.
1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது உயர்கல்வித் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்யும் நிறுவனம். அந்தக் பிள்ளைகளின் நிலைமையைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் எடுத்த படங்களை சபையில் சமர்ப்பிக்கிறேன். கோழிகளுக்கு அமைக்கும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன, சரியான சுவர்கள் இல்லை, மின்விளக்குகள் இல்லை, எங்கு பார்த்தாலும் நுளம்புகள். பிள்ளைகள் சமைத்து சாப்பிடும் சமையலறையைப் பார்த்தாலே, அங்கே எப்படி சமைக்கலாம் என்று எண்ணத் தோன்றும் அந்த பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சமைத்து சாப்பிட நேரம் கிடைக்கும். பண்ணை என்று ஒன்று உண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு ஆடுகள் மட்டும் இருப்பதைப் பார்த்தேன்.
1955 தெற்காசியாவில் விவசாயத் துறைக்கான மனித வளங்களை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். இதில் எதிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. கிளிநொச்சியில் உள்ள ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனமும் அப்படித்தான். பிள்ளைகள் தங்கும் விடுதி இல்லை, ஆசிரியர்களுக்காக கட்டப்பட்டுள்ள அலுவலக கழிப்பறையில் பிள்ளைகள் குளிக்கின்றனர். இவைகள் இல்லாமல் பிள்ளைகளிடம் கல்வி குறித்த ஈடுபாட்டை ஆளுமையை வளர்க்க முடியும். இந்த உட்கட்டமைப்பிற்காக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு 36,841 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உயர் கல்வி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள் என்பதை நாம் தேடிப்பார்க்க வேண்டும். அடுத்ததாக தொழிற்கல்வியும் எமது அமைச்சின் கீழ் வருகிறது. தொழிற்கல்வியைப் புறக்கணித்து, மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் நடத்தப்படும் ஒரு துறைக்குப் பதிலாக,
இன்றைய முன்னேறிய உலகிற்கு ஏற்ற வகையில் நமக்குத் தேவையான தொழிற் படை நேரடியாக உருவாக்கப்படுவது அங்கிருந்துதான். நாங்கள் அந்த தொழிறபடையை உருவாக்க கூடிய வகையில் தொழிற் படைக்குத் தேவையான எதிர்கால தொழிற் படைக்குத் தேவையான மேம்பட்ட மற்றும் தொழில்முறை பெறுமானங்களைக் கொண்ட தேர்வை உருவாக்குகிறோம், இது ஒரு இளைஞரின் விருப்பமான ஒரு துறை, முன்னேற்றமான கல்வித் துறையை நாம் உருவாக்குவோம். இந்த விடயத்தை அனைவரும் கட்சி, நிற, பேதமின்றி பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த விடயத்தில் கவனம் செலுத்துவோம். நமது நாட்டின் எதிர்காலத்திற்கு இது மிகவும் முக்கியமான துறையாகும். இதன் மூலம் தான் நம் நாடு நம் பிள்ளைகளை இந்த உலகத்திற்கு ஏற்ற வகையில் வளர்க்க முடியும். அது மூளையை உருவாக்குவது மட்டுமல்ல, இதயமும் மனிதாபிமானமும் கொண்ட ஒழுக்கப் பண்பாடான சமுதாயம் உருவாக வேண்டுமானால், கல்வித் துறை மாற்றப்பட வேண்டும். மனிதாபிமானமிக்கதாக இருக்க வேண்டும். அந்த மாற்றத்தை நாம் நிச்சயம் ஏற்படுத்துவோம் என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் ஊடகப் பிரிவு