5 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு தென்னை உர மானியம் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் வழங்கப்படும் என்றும், அதன்படி சந்தையில் ரூ.9500 ஆக உள்ள 50 கிலோ உர மூட்டை ரூ.4000 என்ற மானிய விலையில் வழங்கப்படும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து நன்கொடையாக பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டொன் உரத்தை பயன்படுத்தி, எப்பாகல ராக் பொஸ்பேட் மற்றும் யூரியா கலந்து தென்னைக்கான சிறப்பு உரம் 56,000 மெட்ரிக் டொன்னை உர நிறுவனம் தற்போது தயாரித்து வருவதாகவும், 5 ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு அந்த உரம் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நேற்று (05) பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் கூடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டின் தென்னை வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு 2.5 மில்லியன் விதை தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோணத்திற்கும், மீதமுள்ள 20,000 ஏக்கர் பிற பகுதிகளுக்கும் சொந்தமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.