பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.
கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அன்புடன் வரவேற்றார்.
இலங்கை கடற்படையைப் பாராட்டிய பிரதி அமைச்சர், தேசிய பாதுகாப்பிற்கு “Ratama Ekata” திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தக்கவைத்துக் கொள்வதில் கடற்படையின் தொழில்முறைத் தன்மை, மீள்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை அவர் பாராட்டியதுடன், செயல்பாட்டு தயார்நிலை, செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான தேவையான மேலதிக வழிகாட்டுதல்களையும் வழங்கினார். மேலும், நாட்டின் கடல்சார் பிரதேசத்தை பாதுகாப்பதிலும் முக்கிய தேசிய முயற்சிகளை ஆதரிப்பதிலும் இலங்கை கடற்படையின் பங்கில் அரசாங்கத்தின் நம்பிக்கையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.


