சட்டமியற்றும் செயற்பாட்டின்போது சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து வினைத்திறனாகச் செயற்படுவது அவசியம் – அரசாங்க அதிகாரிகள் மத்தியில் சபாநாயகர் தெரிவிப்பு

சட்டமியற்றும் செயற்பாட்டின்போது சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து வினைத்திறனாகச் செயற்படுவது அவசியம் – அரசாங்க அதிகாரிகள் மத்தியில் சபாநாயகர் தெரிவிப்பு
  • :

🔸 மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சட்ட திட்டங்கள் பாராளுமன்றத்தில் முறையாகவும், விரைவாகவும் நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்குரியது

 

சட்டமியற்றும் செயற்பாட்டின் போது சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் சட்டவாக்கமான பாராளுமன்றத்துடன் வினைத்திறனான முறையில் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

சட்டமியற்றல் போன்ற அரசாங்கத்தின் பணிகளைப் பாராளுமன்றத்தில் முன்வைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாங்க அதிகாரிகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகத்தினால் பாராளுமன்ற வளாகத்தில் கடந்த மே 29ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட சட்டவாக்க செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
சட்டமியற்றல் உள்ளிட்ட சட்டவாக்க செயற்பாடுகளுக்காக சபை முதல்வர் அலுவலகத்தினால் பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படும் ஆவணங்கள் சரியான உள்ளடக்கங்களுடன், உரிய காலப்பகுதிக்குள் அனுப்பிவைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார். அவ்வாறில்லாவிட்டால் அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான சட்டதிட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது அவை முறையானதாகவும், விரைவானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பு என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தின் ஊடாகப் பொது மக்களுக்கு தகவல்கள் செல்வது தொடர்வதால், அந்தத் தகவல்கள் அரசாங்க அதிகாரிகள் மூலம் பாராளுமன்றத்திற்குத் துல்லியமாகத் தெரியப்படுத்தப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினார். இந்தப் பணிகள் மிகவும் துல்லியமான பொறிமுறையின் கீழ் திறம்பட மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் மாயாதுன்ன, பாராளுமன்ற சட்டவாக்கப் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களப் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, பாராளுமன்ற பிரதிப் படைக்கல சேவிதர் அசிந்த குரே, பாராளுமன்ற இணைய அமைப்பின் பொறியியலாளர் சமிந்த வில்லோராரச்சி, சபை ஆவண அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் காஞ்சன ஹேரத் உள்ளிட்டோர் இதில் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இச்செயலமர்வில் பங்கெடுத்தனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]