இலங்கைக்கான அரச பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்நாட்டிலிருந்து புறப்பட்டனர்
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மாலைதீவு - இலங்கை இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரின் இந்த இலங்கை விஜயம் வெற்றிகரமாக அமைந்திருந்தது.
மாலைதீவு ஜனாதிபதி இந்நாட்டிற்கு வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதன் மூலம் இந்த விஜயம் வெற்றிகரமாக அமைந்தது.
மாலைதீவு ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினரை வழியனுப்புவதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா உட்பட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.


