இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
உலகளாவிய அளவில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, நாட்டின் பாதுகாப்பும் அமைதியும் பாதிக்கப்படும் வகையிலான சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள், அவற்றின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிற இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்றை தயாரித்து அமுல்படுத்துமாறும், மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அல்லது தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகள், அவர்களின் சொத்துக்கள் மற்றும் தங்கும் இடங்கள், அதேபோல் வணிக நிலையங்கள், சுற்றுலா மையங்கள்/இலக்குகள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மத வழிபாட்டு நிலையங்களில் தங்கியிருப்போர் மற்றும் அவர்களுடைய சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தும் போது முப்படைகளின் உதவி தேவையானால், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


