இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும்

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும்
  • :

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும்.

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். இந்த இரண்டு தலைமுறையினரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக எங்கள் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்.

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின் உலகம் உண்மையான மற்றும் அழுக்கற்ற உலகம் என்பதால் அது மிகவும் அழகானது. அந்த அழகை அனுபவிக்க அவர்களுக்கு தடையற்ற வாய்ப்பை வழங்குவது ஒரு சமூகத்தின் பொறுப்பாகும். உரிமைகளுடன் கடமைகளும் பொறுப்புகளும் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் ஒரு அரசாங்கமாக, சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நாங்கள் எப்போதும் உறுதிபூண்டுள்ளோம். சிறுவர் என்பது யார் என்பதை மிகவும் நடைமுறை மற்றும் விரிவான முறையில் வரையறுப்பதன் மூலம் சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தலையீடுகளை நாங்கள் செய்து வருகிறோம்.

அதில் சகல பிள்ளைகளினதும் உடல் உள நலன் மற்றும் அபிவிருத்திக்காக கல்விக்கான சமமான பிரவேசம் , வழிகாட்டுதல், சமூகப் பாதுகாப்பு, சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் பிள்ளைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பு, அத்துடன் அனைத்து பிள்ளைகளின் உடல் மற்றும் மன நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக சரியான ஊட்டச்சத்தை வழங்குதல் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. பாடசாலை செல்லும் வயதுடைய எந்த ஒரு பிள்ளையும் இனம், பொருளாதார நிலை அல்லது வேறு எந்த காரணிகளாலும் கல்வியை இழக்கக்கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், ஒட்டிசம் உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சேவை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

அத்தகைய சமயத்தில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தின கொண்டாட்டத்தை " உலகை வழிநடாத்த - அன்பால் போஷியுங்கள்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்வதன் மூலம் அந்த இலக்குகளை நோக்கி செல்ல மேலும் வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த விசேட தினத்தில், நம் பிள்ளைகளுக்கு அன்பு, ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதாக நாம் மீண்டும் உறுதிமொழியளிக்கிறோம். அவர்களின் மகிழ்ச்சியான புன்னகை நமது தேசத்தின் நம்பிக்கையும் பலமும் ஆகும். மேலும், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு நமது முதியவர்கள் அளித்த பங்களிப்பிற்காக அவர்களுக்கு நமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பும் மரியாதையும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம்!
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 அக்டோபர் 01 ஆம் திகதி

Related Articles