கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்
  • :
கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இன்று (04) முற்பகல் நடைபெற்றது.

 ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘Vision’ நிகழ்ச்சித் தொடருக்கு இணையாக, வித்யார்த்த கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்போது, எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற பாரம்பரியத்தின் வரலாறு மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் வகிபாகம் ஆகியன குறித்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் நியமனம், சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்தல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தல் ஆகியனவும் இடம்பெற்றன.
மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பங்கேற்பிற்கான சான்றிதழ்களும் இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாடசாலைக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டன.
 
இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார, ஜனாதிபதியின் பொது மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (சட்டவாக்க சேவைகள்) ஜயலத் பெரேரா, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிறி கால்லகே, அதன் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, கண்டி வித்யார்த்த கல்லூரியின் அதிபர் எம். ஏ. எஸ். ஸ்ரீலால் ஆகியோருடன் ஆசிரியர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles