இலங்கையின் கௌரவ பிரதி சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்டக் குழுவினர் கடந்த மே 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களின் அழைப்பிற்கு அமைய லோக்சபா செயலகத்தின் பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (BPST) இந்தத் திட்டம் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த உயர்மட்டக் குழுவில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தவிசாளர் குழாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ உறுப்பினர்கள், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கியிருந்தனர். இவர்களுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி
ரோஹனதீர மற்றும் பாராளுமன்ற செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் இணைந்திருந்தனர்.
புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற நூலகக் கட்டடத்தில் மே 26ஆம் திகதி இடம்பெற்ற வரவேற்பு மற்றும் சுருக்கமான ஆரம்ப அமர்வுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் வரலாற்றுப் பின்புலம் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தக் குழுவினர் லோக் சபா, ராஜ்ஜசபா, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம், உத்வேகத் தலம் ஆகியவற்றில் வழிநடத்தப்பட்ட சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தக் குழுவினர் மே 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடயம் சார்ந்த தொடர்ச்சியான அமர்வுகளில் கலந்துகொண்டனர். இந்திய பாராளுமன்றத்தின் நிதிக் குழுக்கள் : இணைச் செயலாளர் ஸ்ரீ எச்.ராம் பிரகாஷ், சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஸ்ரீ பி.முரளீதரன் ஆகியோர் முக்கியமான நிதிக் குழுக்கள் பற்றிக் குறிப்பாக சிரேஷ்ட எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தலைமை தாங்கும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு குறித்து விளக்கமளித்தனர். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை ஆராய்கின்றன. குறிப்பாக, இந்தக் குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படுவதில்லை.
திணைக்களங்களுடன் தொடர்புடைய நிலைக் குழுக்கள் : இந்த அமர்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சத்யபால் சிங் தலைமை தாங்கியதுடன், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினால் அமைச்சுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட மானியங்களின் கோரிக்கைகளை குழுக்கள் எவ்வாறு ஆராய்கின்றன என்பதை இந்த அமர்வு விளக்கியிருந்தது.
பாராளுமன்றக் கேள்விகள் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் : பாராளுமன்ற உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் இந்த அமர்வை நடத்தியிருந்ததுடன், கேள்விக்கான நேரத்தில் ஒவ்வொரு நாளும் 20 கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கேள்விகளுக்குப் பதிலளிக்க அமைச்சர்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதுடன், எழுத்துமூலமான பதில்கள் மு.ப 10.30 மணிக்கு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஈடுபாடு நிறைந்த இந்த அமர்வுகள் இந்தியாவின் வலுவான மேற்பார்வை மற்றும் சட்டமன்ற அமைப்புகள் பற்றிய உள்ளக விளக்கங்களை வழங்கியதுடன், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒப்பீட்டுப் பார்ப்பதற்கும் அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன.
இலங்கை பாராளுமன்ற உயர்மட்டக் குழுவினர் மே 28ஆம் திகதி புதன்கிழமை இந்திய தனித்துவ அடையாள ஆணையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையகத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஸ்ரீ புவனேஷ் குமார் குழுவினரை வரவேற்றார். இந்தியாவின் தனித்துவமான பயோமெட்ரிக் அடையாள அமைப்பான ஆதார் கட்டமைப்பின் அடிப்படையிலான டிஜிட்டல் உட்கட்டமைப்பைப் புரிந்துகொள்வது குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்பட்டது. பயோமெட்ரிக் தரவுகளின் அங்கீகாரம், தரவுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது சேவை வழங்கலில் ஆதாரின் வகிபாகம் குறித்து பிரதம செயற்பாட்டு அதிகாரி விளக்கமளித்தார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்டக் குழுவினர் லோச் சபாவின் சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லா அவர்களைச் சந்தித்தனர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் ஜனநாயக உறவுகள் பற்றி இச்சந்திப்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. உலகப் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்படுவது மற்றும் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்திய சபாநாயகர் வலியுறுத்தினார். சட்டமன்ற செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் மாற்றத்தக்க பங்கு குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் கட்டமைப்பிற்கு விஜயம் செய்த குழுவினர், அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சச்சின் சதுர்வேதி அவர்களுடன் அபிவிருத்திக் கொள்கைகள் மற்றும் உலகளாவிய தெற்கு ஒத்துழைப்புப் பற்றிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது, இந்தியாவின் “அயலுறவுக்கு முன்னுரிமை” என்ற கொள்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்புப் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சமீபத்திய பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான ஒருமைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதுடன், பயங்கரவாச் செயல் கண்டிக்கப்பட்டு அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பரஸ்பர உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கைத் தூதுக் குழுவினர் மே 29ஆம் திகதி ஆக்ராவிற்கு விஜயம் செய்து வரலாற்றுப் புகழ்மிக்க தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
கட்சிதாவல் தடைச் சட்டம், முதற்கோலாசான்களின் வகிபாகம், சட்டவாக்க மற்றும் வலவுசெலவுத்திட்ட நடைமுறைகள், பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் நெறிமுறைகள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுடனான ஈடுபாடு ஆகிய விடயங்கள் குறித்தும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டன. இவை நிறுவன அறிவை வலுப்படுத்துதல், ஜனநாயக நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் பாராளுமன்றங்களில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டமைந்தன.
பாராளுமன்ற ஜனநாயகத்தை விஸ்தரித்தல், பரஸ்பர புரிந்துணர்வை மீள் உறுதிப்படுத்தல் மற்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகால ஒத்துழைப்பை வளர்ப்பது போன்ற விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கைத் தூதுக்குழுவினரின் இந்தப் பங்களிப்பு அமைந்திருந்தது. இந்த முயற்சி, ஜனநாயக விழுமியங்கள், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகவும் அமைந்தது.