இளம் பிராந்திய ஊடகவியலாளர்களின் வலையமைப்பை உருவாக்குவதற்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தற்போது ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் ஒரு இளைஞர் அல்லது யுவதி என்ற அடிப்படையில் இளம் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி, அதன் உள்ளடக்கம் மற்றும் பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து நேற்று (11) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை ஒரு துறையில் மட்டும் மட்டுப்படுத்தாமல், மாறாக இதழியல், தொலைக்காட்சி மற்றும் வானொலி, டிஜிட்டல் ஊடகம் போன்ற அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட உள்ளது.
2500 இற்கும் அதிகமான விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக இந்த சந்தர்ப்பம் கிடைக்க உள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் , ஊடகத்துறை அமைச்சும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்கின்றன. நேர்முகப் பரீட்சையின் பின்னர் இதற்காக இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்படுவதுடன், ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் இளைஞர் யுவதிகளுக்காக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சிறந்த ஊடகவியலை நோக்காகக் கொண்டு தொழில்முறை பிராந்திய ஊடகவியலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இக்கலந்துரையாடலில் ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் இளைஞர் விவகாரப் பிரிவின் மேலதிக செயலாளர் சுமித் ஷாந்த, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுண் விஜேரத்ன உட்பட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் தேசிய சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்


