துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் அநுர கருணாதிலக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேற்று (19.02.2026) வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இக்குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரின் தலைமையில், வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகளை ஊக்குவிப்பது மற்றும் அதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதை தொடர்ந்து,
குறித்த உயர்மட்டக் குழுவினர் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அங்கு நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் குழுவினருக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், விமான நிலையத்தின் தற்போதைய தேவைகள், நடைமுறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


