சீனாவின் ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் கௌரவ ஜாங் குவான் (Zhang Quan) தலைமையிலான தூதுக் குழுவினர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று (21) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, மக்களின் அபிலாஷைகளை நிலைநிறுத்துவதில், குறிப்பாக ஊழல் எதிர்ப்பு, நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் சட்டமியற்றும் அமைப்பாக இலங்கை பாராளுமன்றம் அர்ப்பணித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இதன் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, நாட்டின் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றியதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பாராட்டிய சபாநாயகர், பல ஆண்டுகளாக சீனா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
இது இலங்கைக்கான தனது முதல் விஜயம் எனக் குறிப்பிட்ட கௌரவ ஜாங் குவான் அவர்கள், இலங்கை மக்கள் அளித்த அன்பான விருந்தோம்பலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரத்திற்குத் தான் விஜயம் செய்ததாகத் தெரிவித்த அவர் இது இரு நாடுகளுக்கும் நீண்டகால மூலோபாய பெறுமதியைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தித் திட்டமாகும் எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே, குறிப்பாக ஷாங்காயுடன் விஞ்ஞானம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்களை ஏற்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இத்துறைகளில் இருதரப்பு ஈடுபாட்டை மேலும் மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.