தொழில்சார்ந்தன்மை மற்றும் பயிற்சியுடன் உலகை விரிவான கோணத்தில் பார்க்கத்தக்க ஒரு மாணவர் சமுதாயத்தினை உயர்கல்வியினூடாக உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ற வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி மாணவர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026.05.12ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற, "என்னிடமிருந்து மஹபொலவிற்கு, மஹபொலவிலிருந்து பிள்ளைகளுக்கு" எனும் தலைப்பில் மஹபொல புலமைப்பரிசில் பெற்ற பழைய மாணவர்களுக்கான இணையதளத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு மற்றும், 2023/2024ஆம் ஆண்டுக்கான மஹபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மஹபொல புலமைப்பரிசில் மூலம் பயன்பெற்ற பழைய மாணவர்களையும், தற்போது அதன் பயனைப் பெற்றுவரும் மாணவர்களையும் ஒரே வலையமைப்பிற்குள் கொண்டுவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'மஹபொல பழைய மாணவர்கள் இணையதளம்' இதன்போது பிரதமரால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன், திட்வா அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்குப் பிரதமரால் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த இணையதளத்தின் ஊடாக மஹபொல புலமைப்பரிசில் பெற்ற பழைய மாணவர்களுக்கும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும் இடையே தொழில்சார் உறவுகளைப் பலப்படுத்துவதன் மூலம், தொழில் வழிகாட்டல், தொழில் வாய்ப்புகளை இனங்காணுதல், தேவையுள்ள மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்குதல் மற்றும் மஹபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கொள்ளளவினை மேலும் விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
இந்த மஹபொல புலமைப்பரிசில் மூலம் கல்வியைப் பெற்று இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் இருக்கின்றார்கள். இந்த நிதியத்தின் உதவியைப் பெற்ற அனைவரையும் ஒன்றிணைத்து, அவர்களின் அனுபவங்கள் மூலம் அடுத்த தலைமுறையைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லும் பயணமே, இன்றைய தினம் புலமைப்பரிசில் பெற்ற பழைய மாணவர்களுக்கான இணையதளத்தை ஆரம்பித்ததன் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.
எமது அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், மஹபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக்கி, மாணவர்களுக்குரிய கொடுப்பனவுகளை உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அத்தோடு, மஹபொல கொடுப்பனவை 10,000 ரூபா வரை அதிகரிக்கவும் எம்மால் முடிந்திருக்கின்றது. இது மாணவர் சமூகம் பெற்ற ஒரு பெரும் வெற்றியாகும்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட பழைய மாணவர் வலையமைப்பின் ஊடாக, மஹபொல நிதியமானது வெறும் நிதி உதவிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, அதற்கு அப்பால் சென்று, மஹபொல மூலம் உதவிபெறும் மாணவர்களின் ஏனைய தேவைகளுக்கும் பக்கபலமாக அமையும் வகையில் அதனைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அதனாலேயே இது ஒரு தீர்க்கமான நகர்வாக அமைகின்றது.
உங்களுக்குக் கிடைத்த இந்தப் புலமைப்பரிசினை உங்களுக்கு மாத்திரம் கிடைத்த ஒன்றாகக் கருதாது, இதன் ஊடாக உங்களது உயர்கல்விக்கான பிரவேசத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், உங்களிடமிருந்து நாட்டிற்கு ஒரு சேவை கிடைப்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டை மட்டுமன்றி உலகையே சிறந்ததொரு இடமாக மாற்றுவதற்குத் தேவையான தாக்கத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். உங்களது வெற்றியே உங்களது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


