இலங்கை திரு நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக தலைவர் மனோகரன் உள்ளிட்ட கழக பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். தாய்த்திரு நாட்டின் தேசிய கொடி அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைது.
அத்துடன், நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரைகள், மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரை என்பன நிகழ்த்தப்பட்டன.
மேலும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் அணி நடை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய பவணி மற்றும் சாரணர் மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் மரியாதை அணிவகுப்பு நடை ஆகியன நடைபெற்றன.
இதன்போது, குறித்த நிகழ்வில் மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களும், அரச உத்தியோகத்தர்களுக்கு அதிதிகளினால் பயன் தரும் மரக் கன்றுகளும் வழங்கப்பட்ட ன. அத்துடன் மாவட்ட செயலக வளாகத்தில் அதிதிகளினால் தென்னை மரக் கன்றுகள் 78ஆவது சுதந்திர தின நினைவாக மரக் கன்றுகளும் நடப்பட்டன.


