தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழா நேற்று (15) மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது.
இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றிய நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் தலைமையில பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள் அரசாங்க அதிபரின் கரங்களால் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் இடத்தினைப் பெற்று மட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த கலாரூபன் குழுவின் 100,000/= ரூபாய் பணப்பரிசினை பெற்றுக் கொண்டதோடு, இரண்டாம் இடத்தினைப் பெற்று மட்டக்களப்பு கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்த எஸ். ரூபேசன் மற்றும் குழுவினர்
50,000/= ரூபா பணப்பரிசை பெற்றுக் கொண்டனர். மூன்றாம் இடத்தினைப் பெற்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.குலேந்திரன் மற்றும் ரகு குழுவினர் 25,000/= ரூபா பணப்பரிசை பெற்றுக்கொண்டனர்.
இப் போட்டி புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் தமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலமைந்த கருப்பொருளில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் சுயாதீன நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.