இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்ப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று (28) சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த விஷேட நிகழ்வின் போது, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மர்ஷாத் பாரி அவர்கள் உட்பட ஏழு பேரைக் கொண்ட வக்ப் சபை உறுப்பினர்கள் பிரதி அமைச்சரிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நியமனமானது 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும்.
எம்.மர்ஷட் பாரி தலைவராகவும், அஷ்-ஷைக் எம்.எஸ்.எம்.இஹ்ஸான் ரஷாதி, எம்.வை.ஏ.ரிபாக் அகமட், ஏ.எம்.ஜே.எம்.ஜவ்பர், சட்டத்தரணி செய்னுல் மசூதீன், எம்.ஏ.எம்.அரூஸ், எம்.ஐ.அமினுடீன் ஆகியோர் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடமிருந்து நியமனம் பெற்ற வக்ப் சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
இந் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், முஸ்லிம் சமய அமைப்புகளின் நிருவாக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதும் புதிய சபையின் பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக பள்ளிவாசல் நிருவாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூர்வமாகவும் நியாயமான முறையில் தீர்க்க புதிய தலைவர் மற்றும் குழுவினர் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையையுடன் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


