தேசிய நீர்வாழ் சூழல் அமைப்பிற்கும், உள்ளூர் மீன் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஜெயன்ட் ஸ்னேக்ஹெட்’ (Giant Snakehead) எனும் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு மீன் இனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்ட "தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025", சனிக்கிழமை (செப்டம்பர் 20) தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவுற்றது.
கடற்றொழில் அமைச்சின் முழுமையான வழிகாட்டலின் கீழ், வடமேல் மாகாண சபையின் பங்களிப்புடன், ‘அங்லிங் பிரஜாவ ஸ்போர்ட் ஃபிஷிங் கிளப்’, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), Clean Sri Lanka நிறுவனம் மற்றும் பிராந்திய மீனவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட தூண்டிலாளர்கள் (Anglers) கலந்துகொண்டனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கலந்துகொண்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், தெதுரு ஓயா பகுதி மீனவ சமூகத்தை ஊக்குவிக்கும் முகமாக 15 மீன்பிடித் தூண்டில்கள் மற்றும் 03 ரீல்கள் உள்ளிட்ட பெறுமதியான மீன்பிடி உபகரணத் தொகுதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த முன்மாதிரியான நிகழ்ச்சியினை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அமைச்சு எதிர்பார்த்துள்ளது.


