அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில், வீடற்றவர்களுக்காக முன்னெடுக்கப்படும் தேசிய வீட்டுத்திட்டம், திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மொறவெவ பிரதேச செயலாளர் நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இப்பிரதேசத்தில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் தலா ஒரு பயனாளி வீதம், மொத்தம் 10 பயனாளிகள் இந்த வீட்டுத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வீடும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதி கொண்டதாகும். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில், வீடு நிருமாணிப்பிற்காக இரு குடும்பங்களுக்கு இரு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், அந்தப் பயனாளிகளுக்கு வீட்டு நிர்மாணத்திற்கான ஆரம்ப கட்ட நிதியை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வழங்கி வைத்தார்.
அத்துடன், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த ஏனைய 8 பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகளும் பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் விமல் ராஜசிங்க, பிரதேச செயலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமக்கென ஒரு சொந்தக் கூரையின் கீழ் வாழ்வதையும், சமூகத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது


