வரகாபொல பிரதேச செயலகத்தின், கலபிட்டமட பிரதேசத்தில், இறப்பிடிகல தொடக்கம் ஹப்புகொட வரை பாய்ந்து செல்லும் நீரோடை 2.5 கிலோமீற்றர் பகுதியில் நீரோடையின் மத்தியிலிருந்து இருமருங்கிலும் பதினைந்து (15) மீற்றர்கள் வரையான நிலப்பரப்பு நிக்கந்துபொல சரணாலயமாக பிரகடனப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (02.05.2025) நடைபெற்ற அமைச்சரவையில் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டில் இனங்காணப்பட்டுள்ள பந்துல மீனினம் எமது நாட்டுக்கேயுரிய தனித்துவ மீனினமானது, அருகிவரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள விசேட மீனினமாகும். தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கமைய, இம்மீனினம் 300 அளவிலோ அல்லது அதற்குக் குறைவாகவோ வாழ்கின்றதாகக் கருதப்படுகின்றது.
கேகாலை மாவட்டத்தில், வரகாபொல பிரதேச செயலகப் பிரிவில் கலபிட்டமட பிரதேசத்தில், இறப்பிடிகல தொடக்கம் ஹப்புகொட வரை பாய்ந்து செல்லும் நீரோடை 2.5 கிலோமீற்றர் பகுதியில் குறித்த மீனினம் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நீரோடை வழியில் இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படும் நெற்செய்கைகள் காணப்படுகின்றமையால், மனித நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுகின்ற நீரோடையில் வாழ்கின்றமையால், செந்நிரல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இம்மீனினத்தின் நிலைத்திருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.