எதிர்கால உலகிற்கு ஏற்ற ‘திறன்மிகு பிரஜைகளை’ (Smart Citizens) உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு - அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன

எதிர்கால உலகிற்கு ஏற்ற ‘திறன்மிகு பிரஜைகளை’ (Smart Citizens) உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு - அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன
  • :

ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தியை முன்னிறுத்தி இளைஞர் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில், வாலாஹேன தேசிய இளைஞர் படையணி பயிற்சி மத்திய நிலையத்தின் 2026 - I குழுவின் சான்றிதழ் வழங்கும் விழா, கடந்த மே 12 ஆம் திகதி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

 

 

இதன்போது உரையாற்றிய அமைச்சர், எதிர்கால உலகிற்கு பொருத்தமான திறன்மிகு பிரஜைகளைஉருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

இம்முதலாம் குழுவினருக்காக தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி மற்றும் வாழ்க்கைத் திறன் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தொழில்சார் மற்றும் சமூக ரீதியாக அவர்களை வலுப்படுத்தும் நோக்கில் முறையான பாடநெறியும் வெளிக்களப் பயிற்சியும் வழங்கப்பட்டன. இதனை வெற்றிகரமாக நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு அமைச்சரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்விச் சீர்திருத்தத்தின் புதிய பாதை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், புதிய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 9 இன் இறுதியில் நடத்தப்படும் தேசிய பரீட்சையின் பின்னர், மாணவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப கல்வித்துறை அல்லது தொழிற்கல்வித் துறையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வெறும் பட்டதாரிகள் மாத்திரமன்றி, தொழில்சார் திறமை கொண்டவர்களும் சமூகத்தில் உருவாக வேண்டும் எனவும், இதற்காக நாடு முழுவதும் 50 தொழில்நுட்பக் கல்லூரிகளை புதிதாக அமைக்க அல்லது தரம் உயர்த்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூகத்தில் பெரும் பேசும்பொருளான 'சிஸ்டம் சேஞ்ச்' (System Change) அல்லது முறைமை மாற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்:

"முறைமை மாற்றம் என்பது பிரஜைகளின் மனதிலிருந்தும் செயல்பாட்டிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும். நபர்கள் பேரே வாவிக்குள் விழுந்ததாலேயே முறைமை மாறிவிடாது. பிரஜைகள் உள்ளுக்குள் பலமடைந்து பொறுப்புடன் செயல்பட்டால், எந்தவொரு ஆட்சியின் கீழும் நாட்டை நல்வழிப்படுத்த முடியும்" என்றார்.

12-17 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் 90% வெற்றியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை முழுமையாக ஒழிக்க இளைஞர் தலைமுறை போதைப்பொருளுக்கு எதிராக "இல்லை" (No) என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தொழில்சார் திறன்களுக்கு மேலதிகமாக இலக்கியம், இசை, கலை மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொற்றாத நோயற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க, 'வாழும் வருடங்களை' விட 'ஆரோக்கியமாக வாழும் வருடங்களை' அதிகரிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் எனக் கூறி அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் திமுது அறக்கட்டளையின் தலைவர் அருட்தந்தை ஜூட் நிக்கலஸ், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், வாலாஹேன தேசிய இளைஞர் படையணி நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் கே.எம்.டி. கட்டுகம்பல மற்றும் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Articles