களனி, ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு 2025.05.27ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தலைமையில் நடைபெற்றது.
இங்கு களனி, ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அவர்கள், பாராளுமன்றத்தின் பாரம்பரியம், அதன் வகிபாகம் மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
அத்துடன், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைகளின் ஊடாக சமூகத்தில் மற்றவர்களை மதிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்றும், இதன்மூலம் வலுவான மற்றும் படைப்பாற்றல் மிக்க தனிநபர்களாக மிளிருவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க உரையாற்றுகையில், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம் குறித்த அடிப்படை அறிமுகமொன்றை வழங்கியதுடன், சிறந்த நாட்டை உருவாக்க மாணவர்களின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவியருக்கு பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் மற்றும் ஏனைய அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.விஜேபண்டார, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய, களனி வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எஸ். நந்தசிறி, ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் அதிபர் ஆர்.கே.குணதிலக, பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.