இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கும், இலங்கைக்கான கியூப தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கும், இலங்கைக்கான கியூப தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்
  • :
இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கும், இலங்கைக்கான கியூப தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்

 கௌரவ இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் தலைமையிலான இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், கியூபா குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று அண்மையில் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

 
இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்வது இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த கௌரவ அமைச்சர், இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கு இடையே பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துவது மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
 
இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான கியூப தூதுவர் மேன்மைதங்கிய பட்ரீசியா லசாரா குவேரா, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதில் கியூப – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
 
இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கங்களின் உறுப்பினர்களிடையே நெருங்கிய தொடர்பை மேம்படுத்தும் நோக்கில், ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார். கியூபாவின் தலைவரான ஃபிடெல் கஸ்ட்ரோவின் பிறந்த தினத்தின் நூற்றாண்டையொட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் கலந்துகொள்ளுமாறும் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தூதுவர் அழைப்பு விடுத்தார்.
 
சர்வதேச மட்டத்தில் இலங்கை கியூபாவுக்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் குறித்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
அத்துடன், கியூபா தற்பொழுது எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்தும் அந்நாட்டுத் தூதுவர் இங்கு விரிவாக விளக்கமளித்தார்.

Related Articles