நாட்டின் வலுசக்தி இறையாண்மைக்காக அரசாங்கம் தொடர்ந்து முன்நிற்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை
- ஜனாதிபதி
இந்நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் Electricity Distribution Lanka (Pvt) Ltd, National Transmission Network Service Provider (Pvt) Ltd, Electricity Generation Lanka (Pvt) Ltd and National System Operator (Pvt) Ltd உட்பட புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மின்சாரத் துறையின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் புதிய மாற்றத்திற்கு ஒரு புதிய நிறுவனக் கட்டமைப்பு அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக பழைய
கட்டமைப்பு இனிமேலும் போதுமானதாக இல்லை என்றும், புதிய கட்டமைப்பின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
அதன்போது, தற்போது வகிக்கும் பதவிகள் அல்லது சம்பள அளவுகள் எந்த வகையிலும் குறைக்கப்படாமலும், பதவி உயர்வுக்கு செல்வதற்கு நிலவிய தடைகளை நீக்கும் வகையில் செயற்படல், அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாத்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் இலங்கை மின்சார சபையாக இருந்த அனைத்து உரிமைகளையும் உறுதி செய்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் உள்வாங்கப்படும்போது இலங்கை மின்சார சபையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்த்தல், வலுசக்தி இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் அதை முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றுவது ஆகிய கோட்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்காக அன்றி, நாட்டிற்காகவும் பொதுமக்களுக்காகவும் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மிகவும் செயற்திறனாகவும், தொடர்ச்சியாகவும், நியாயமான விலையிலும் நுகர்வோரின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால், அது அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், இலங்கை மின்சார சபையில் நடப்பது நீண்டகால நிறுவன கட்டமைப்பை புதிய நிறுவன கட்டமைப்பாக மாற்றுவது மாத்திரமே என்றும், இது விற்பனையோ, அரச உரிமையை கைவிடுவதோ அல்லது வலுசக்தி இறையாண்மையை கைவிடுவதோ அல்ல என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதுவே உலகின் அபிவிருத்திக்கான பாதை என்றும் தெரிவித்தார்.
புதிய மறுசீரமைப்பு செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இந்த முயற்சிகளில் வழங்கும் பங்களிப்புக்காக குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால மற்றும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


