களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று முன்தினம் (27) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ திட்டத்துடன் இணைந்ததாக, களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹெலேனா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற மரபின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து இலங்கை பாராளுமன்றத்தின் பணியாட்டொகுதிப் பிரதானி, பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.
மாணவர் பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு, சபாநாயகர் பதவிப் பிரமாணம் மற்றும் உறுப்பினர்களின் பதவிப் பிரமாணத்துடன் ஆரம்பமானது.
எதிர்மறை கருத்துக்களை வீரமாகக் கருதும் சமூகத்திற்குப் பதிலாக, மற்றவர்களின் விழுமியங்களை மதிக்கும் சமூகத்தை பாடசாலைகள் மூலம் கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார சுட்டிக்காட்டினார். இது ஒரு பொறுப்புள்ள குடிமகனை உருவாக்கும் என்றும், குடிமக்கள் தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நாடு ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
உடல், உள மற்றும் சமூகம் என்ற வகையில் இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தைரியமாக முகங்கொடுக்கக் கூடிய, சவால்களை எதிர்கொள்ளத் தயங்காத சந்ததியை பாடசாலையின் ஊடாக உருவாக்க வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற எதையும் பயமின்றி ‘இல்லை’ ,’முடியாது’ என்று சொல்வதற்குப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் இலங்கை வங்கிக் கணக்குகள் ஆரம்பித்தல் என்பன அதனைத் தொடர்ந்து இடம்பெற்றன.
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க மற்றும் ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரி அதிபர் ஆர்.கே. குணதிலக்க மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.