நரம்பியல் மருத்துவசேவைகளை வினைத்திறனாக வழங்குவதற்காகப் புதுப்பிக்கப்பட்ட "நரம்பியல் நிறுவனம்" (Institute of Neurology) பொது மக்கள் பாவனைக்கு கையளிப்பு
இலங்கையில் நரம்பியல் சம்பந்தமான மருத்துவசேவைகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை தேசிய மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட "நரம்பியல் நிறுவனம்" (Institute of Neurology) இன்று (01) 99 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக புனரமைக்கப்பட்ட இந்த திட்டம் (NHSL) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலும், சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி பங்கேற்புடனும் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
நரம்பியல் சேவைகள் மூலம், மூளை, முள்ளந்தண்டு வடம், நரம்பு மற்றும் தசை மண்டலம் தொடர்பான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன, இந்த திட்டத்தினால், இலங்கையில் நரம்பியல் சிகிச்சை சேவைகள் மிகவும் வினைத்திறனாகவும் மாற்றமடைவதற்கு வாய்ப்புக் காணப்படுகிறது.
இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு, நரம்பியல் நிறுவனத்தின் நிறுவனரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான வைத்தியர் ஜே.பி. பீரிஸின் உருவப்படம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. நரம்பியல் நிறுவனத்தின் நரம்பியல் பிரிவு விடுதி 62 / 63-ம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு முதலாவது நோயாளிக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பிரிவில் உள்ள இரண்டு விடுதிகளும் 22 நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளுடன் ஆண் மற்றும் பெண் என பிரிக்கப்பட்டுள்ளன.
இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் நீண்டகாலமாக நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார். சூழ்நிலைகளை பரிசீலித்து மீண்டும் சீரமைப்பு பணியை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டார்.
முதல் மாடியின் புனரமைப்புக்கு 52 மில்லியன் ரூபாவும், தரைத்தளத்தின் புனரமைப்பிற்கு 22 மில்லியன் ரூபாவும், மூன்றாம் மாடியின் புனரமைப்பிற்கு 25 மில்லியன் ரூபாவும், மொத்தமாக 99 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.
இந்நாட்டின் தற்போதைய சுகாதாரத் துறையின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர், சுமார் 1900 சுகாதார உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான பத்திரிகை விளம்பரத்தின் படி சுமார் 92000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு முன்னர் இவ்வாறான ஆட்சேர்ப்புகள் அரசியல்வாதிகளின் பட்டியல்களில் நிரப்பப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.


