பண்டிகைக் காலத்திற்காக நடத்தப்படும் விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், கடந்த சில நாட்களில் 1200 சோதனைகளை நடத்தியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்தி சோதனைகளை நடத்தவும், விறபனைப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாதவர்கள், குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள், பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மாற்றுபவர்கள், காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள், பற்றுச்சீட்டுக்களை வழங்காதவர்கள், நிபந்தனைகளுடன் பொருட்களை விற்பனை செய்பவர்கள், பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள், பொருட்களை விற்க மறுப்பவர்கள் மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் விலைக் குறைப்பு மற்றும் விற்பனையை நடத்தி பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் நடத்தப்படும் இந்த சோதனைகளின் போது, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை உயர்த்த முயற்சிப்பவர்கள் மீது புலனாய்வு அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், அத்தகைய வியாபாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை அறிவித்துள்ளது.