பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.
இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவுசெய்யப்பட்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் அவர்கள் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமிவேல் அவர்கள் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள், பாராளுமன்ற இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான பொறிமுறையாக விளங்குகின்றனக் குறிப்பிட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் இவை பெறுமதிவாய்ந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவானது பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாண்புமிகு அடெல் இப்ராஹிம் அவர்கள், அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை மற்றும் எகிப்து இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவித்தார்.
அதேநேரம், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் அடெல் இப்ராஹிம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


