இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் 28 மே அன்று நடைபெற்ற “"XIV International Meeting of High-Ranking Officials Responsible for Security Matters" கலந்து கொண்டு, பன்முக உலக ஒழுங்கின் பின்னணியில் உருவாகி வரும் உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள் குறித்து உரையாற்றினார்.
தனது உரையில் பாதுகாப்புச் செயலாளர், இந்து சமுத்திரத்தின் அதிகரித்து வரும் புவியியல்-அரசியல் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், அந்தப் பிராந்தியத்தை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வளமைக்கான வலயமாகப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வளர்ச்சியடைந்து வரும் பலதுருவ உலக ஒழுங்கு வாய்ப்புகளையும் சவால்களையும் ஒரே நேரத்தில் உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். பல அதிகார மையங்கள் உருவாகி வருவதன் மூலம் உலகின் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு இயக்கவியல் மறுவடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இன்றைய பாதுகாப்புச் சவால்கள் பாரம்பரிய இராணுவ அச்சுறுத்தல்களை மட்டுமே தாண்டிச் செல்கின்றன என்றும், பொருளாதார நிலையற்ற தன்மை, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மை, தவறான தகவல் பரப்புரை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாடு ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு, மீட்சித்திறன், நிலையான அபிவிருத்தி மற்றும் பன்முக ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் விரிவான பாதுகாப்பு அணுகுமுறை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடல் வழிச் சுதந்திரம், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் நாடுகளுக்கிடையிலான பயனுள்ள உரையாடல்களை நிலைநிறுத்துதல் மூலம் பிராந்திய போட்டிகள் மோதல்களாக மாறுவதைத் தடுப்பது முக்கியம் என குறிப்பிட்டார்.
அத்துடன், தீவிரவாதம், இணையவழி குற்றச் செயல்கள், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் அணிசேரா கொள்கை மற்றும் அமைதியான சகவாழ்விற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்திய பாதுகாப்புச் செயலாளர், சிக்கலான உலக சூழலில் பேச்சுவார்த்தை, நம்பிக்கை மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சிறிய நாடுகளுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவித்தார்.
அதிகளவான உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் இந்த சர்வதேச மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


