77ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை நாட்டின் அபிமானத்தை வலியுறுத்திக் காட்டும் விதமாக வசீகரமாகவும் குறைந்த செலவிலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் பிரதான ஒழுங்கமைப்புக் குழுவின் கூட்டத்தின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
அதற்காக இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன குறிப்பிட்டதாக கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சந்தன அபயரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 1,600 பேர் வரையான விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய வீரர்களை கௌரவப்படுத்தி நாட்டின் அபிமானத்தை வலியுறுத்திக் காட்டும் விதத்தில் மிகவும் எளிமையாகவும் வசீகரமாகவும் குறித்த நிகழ்வை நடத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களை பங்குபற்றச் செய்வதனால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த ஆகியோருடன் விமானப்படைத் தளபதி, முப்படையினர், பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளுக்காக பங்களிப்புகளை வழங்கும் ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு


