மனித கடத்தல் வியாபாரம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது தேசிய மனித கடத்தல் தொடர்பிலான பணிக் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்றது.
மனித கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் நோக்கில் குறித்த பணிக்குழு ஊடாக பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்றன. சர்வதேச புலம்பெயர்தலுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் நிகழ் நிலை ஊடாக இணைந்து மனித கடத்தல் தொடர்பாக தெளிவூட்டினர்.
மனித கடத்தலுக்கு எதிரான செயற்திட்டம் ஊடாக குறித்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது. வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக புலம்பெயர்தலின் போது சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக பதிவு செய்து செல்லுதல்,ஏமாற்று நடவடிக்கைகளில் இருந்து பணிப் பெண்களை பாதுகாத்துக் கொள்ளல் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மனித வியாபாரமானது பல்வேறு வடிவங்களில் இடம்பெற்று வருகின்றது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதனை பிரதேச மட்டத்துக்கு கொண்டு செல்லுதல் தொடர்பிலும் பேசப்பட்டது.
மேலும் இணைய வழி மோசடி ஊடாகவும் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் இவ்வாறான ஏமாற்றங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணி குழுவின் செயலாளர் சட்டத்தரணி எச்.எச்.என்.பிரியங்கணி ஹேவாரத்ண , பணிக் குழுவின் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். இளங்கீரன், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#Srilanka #lka #SL #News #newsdotlk


