தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு 50 வருடங்கள் பூர்த்தி அடைவதை முன்னிட்டு நாடு முழுவதும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண பிரதிப் பொது முகாமையாளர் விகும் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
அண்மையில் இரத்தினபுரி கொடக்கவெல்ல கந்தபொல ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்ற மரக்கன்று நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த மரக்கன்று நடும் திட்டத்தில் தென்னை, பழக்கன்றுகள், மருந்து வகை செடி போன்ற கன்றுகளை நடுவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் தேங்காய் பற்றாக்குறையை எதிர்காலத்தில் குறைத்தல், காடுகளின் செறிவை அதிகரித்தல், உள்நாட்டு பல வகைகளை பிரபலப்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக இந்தத் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அவ்வாறே நடப்படும் கன்றுகள் ஜி ஐ எஸ் தொழில் நுட்பம் ஊடாக அவற்றை நடும் இடத்தை கண்டுபிடித்து வரைபடம் ஆக்குவதன் மூலம் அதை கண்காணிப்பதற்கும், சிறுவர்களினால் அதைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மரம் நடும் திட்டத்துடன் இணைந்ததாக கொடக்கவெல பிரதேசத்தில் உள்ள கந்தபொல ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் இரத்தினபுரி பிரதேச முகாமையாளர் லசந்த அமரசேன, இறக்வானை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர சோமசிரி, சிரேஷ்ட சமூக ஆய்வாளர் சிறோமி பிரியதர்ஷினி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.