ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சமூக சக்தி அபிவிருத்தித் திட்டம் நேற்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் ஐந்து பிரதான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு அங்கமாக, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரன் குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் பனைசார் உற்பத்திகளை மேற்கொள்வதற்காக புதிய கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் ம. காந்தீபன், மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலீம்தீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் ரொகான், மன்னார் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் மைக்கேல்ராஜ், கிளீன் ஸ்ரீலங்கா திட்ட உத்தியோகத்தர் மொஹமட் சாஜித், தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் அத்தீக் மற்றும் தலைமன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம சேவையாளர், பிரஜாசக்தி அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.


