சமூக சக்தி - பன்முக வறுமை ஒழிப்புத் திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் முதல் முதலாக ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைவதாக "பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித்திட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நேற்று (02.06.2026) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்தார்.
மேலும், தெரிவிக்கையில், அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களில் மிக முக்கியமான வேலைத் திட்டமாக வறுமையினை ஒழிக்கும் சமூக சக்தி வேலைத் திட்டம் விளங்குவதாகவும், அரசாங்கத்தினால் வறுமையை குறைத்து, வாழ்வாதாரத்தினை உயர்த்தி மக்களின் வாழ்க்கையில் உற்சாகத்தினை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவித்தார். மேலும், அதிமேதகு சனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலில் - யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சக்தி தலைவர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வறுமையினை ஒழிக்க பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மூன்று பிரதான கொள்கைகளில் ஒன்றான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், அடுத்து டிஜிற்றல் மயமாக்குதல் மூலம் ஊழல் ஒழிப்பு மற்றும் கணினி மயப்படுத்திய வேலைத் திட்டங்கள் நடைபெறுவதாகவும், அடுத்து வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமாக சமூக சக்தி வேலைத் திட்டம் இன்றைய தினம் நாடு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கையில் வறுமையானது அண்ணளவாக 12% ஆகவுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் புள்ளிவிபர ரீதியாக 24% காணப்படுவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 20% வறுமை காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன், சண்டிலிப்பாய் பிரதேசத்திலும் வறுமை அதிகமாகவுள்ளதாகவும், எல்லா மக்களையும் சமமாக கருதி அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணமானது கல்வி, கலை, கலாசார பண்பாடுகளுக்கு முதன்மையாக விளங்குவதாகவும், தற்போது எமது பிரதேசத்தில் போதைவஸ்து, பல குழுக்களின் குற்றச் செயல்கள் அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தி மாபியாக்களை ஒழிக்க எமது அரசாங்கம் பல்வேறு வழிகளில் போராடிவருவதாகவும், அதனை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார். மேலும், சண்டிலிப்பாய் பிரதேசத்தினை வறுமை அற்ற பிரதேசமாக மாற்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், எமது நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயல் தாக்கத்தினால் எமது நாட்டிற்கு பாரிய பொருளாதார தாக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினால் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்பன ஏற்பட்டாலும், அரசாங்கமானது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், புலம்பெயர் மக்கள் மற்றும் நாட்டை நேசிப்பவர்கள் அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து "வளமான நாட்டை" உருவாக்க பங்களிப்புக்களை நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


